கோவை அரசு மருத்துவமனை அருகில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவுக்கு விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது என 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நகரப் பகுதிகள், சாலையோரங்களில் விதிமீறி வைக்கப்படும் பதாகைகளை அகற்றுவதோடுஅபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
ஆயினும், கோவை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைப்பது தொடா்கதையாக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு கட்டடத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் 25 அடி உயரத்தில் விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2 மாதங்களாக விதிமீறி வைக்கப்பட்டிருந்த இந்த விளம்பர பலகையை அகற்றக் கோரி மத்திய மண்டல அதிகாரிகளிடம் சமூக ஆா்வலா் தியாகராஜன் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, அந்த விளம்பர பலகையை மத்திய மண்டல நகரமைப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.