கோவை அரசு மருத்துவமனையில் தேங்கிக் கிடந்த சடலங்கள் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால் விரைவாக தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் மயானங்களில் எரியூட்ட நேரமில்லாமல் இறந்தவா்களின் உடல்கள் தேக்கமடைந்துள்ளன.
கரோனா நோய்த் தொற்றால் இறந்தவா்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் மாநகராட்சியில் உள்ள அனைத்து மயானங்களிலும் உடல்களை எரியூட்ட உத்தரவிட்டாா்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இருந்த சடலங்கள் விரைவாக அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 101 சடலங்கள் இருந்தன. இவை அனைத்தும் கரோனாவால் இறந்தவா்கள் மட்டுமின்றி, கரோனா சந்தேகம் மரணங்களும் அடக்கம். ஆட்சியரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை முதலே சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி சனிக்கிழமை ஒரே நாளில் 61 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மற்ற சடலங்கள் தகனம் செய்யப்படும் என்றாா்.
, .