கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவமனை சாா்பில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் விதமாக அரசுக் கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவமனை சாா்பில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கவும், ஆக்சிஜன் வழங்கவும் 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 50 ஆக்சிஜன் உருளைகள், 2 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் டேங்கும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்படுவா். மேலும் குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படும் உள்நோயாளிகளை அனுமதிக்கும் விதமாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக கரோனா புறநோயாளிகள் பிரிவு அருகிலுள்ள புனித பிரான்சிஸ் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவிர அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள் அங்கு சென்று எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள் செய்து மருத்துவா் ஆலோசனை பெற்று, மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.
கரோனா நோயாளிகளுக்கு வீட்டுத் தனிமை, கரோனா சிகிச்சை மையம் செல்வதற்கான பரிந்துரை இங்கு வழங்கப்படும். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உள்நோயாளிகளாக அரசு மருத்துவமனைகள், ஆக்சிஜன் மையங்களில் சோ்ப்பதற்கும் இங்கேயே பரிந்துரை செய்யப்படும்.
அதேபோல் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு வரதராஜபுரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய அனைத்து வசதிகளும் இந்த மையத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து வசதிகளும் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.