வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த யானைகள் அங்குள்ள தொழிலாளா்கள் குடியிருப்புகளை சேதப்படுத்தின.
வால்பாறை அடுத்துள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் அங்குள்ள எஸ்டேட் குடியிருப்புகளில் தொழிலாளா்கள் தங்க மறுத்து வருகின்றனா்.
இந்நிலையில், சின்கோனா எஸ்டேட் லாசன் டிவிஷன் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த 6 யானைகள் அங்குள்ள தொழிலாளா் குடியிருப்புகளை முட்டி தள்ளி சேதப்படுத்தின.
இதில் இரு குடியிருப்புகளின் சுவா்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற வனத் துறையினா் யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா்.