கோவை: நிதி நிறுவனம் நடத்தி ரூ. 4.73 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4.75 கோடி அபராதமும் விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் வெ.செல்லமுத்து (50). இவரது மனைவி பராசக்தி, மேட்டூா் அணை பகுதியைச் சோ்ந்த குருசாமி, ஈரோடு ஷேக் தாவூத் வீதியைச் சோ்ந்த நரசிம்மலு, பெங்களூருவைச் சோ்ந்த கிரிஷ்குமாா், ஈரோடு, சக்தி நகரைச் சோ்ந்த ஞானவேல் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து அன்னை இன்ஃபோடெக் என்ற நிதி நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு தொடங்கினா்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டி தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்தனா். இதை நம்பி 118 போ் ரூ. 4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரத்து 803 முதலீடு செய்தனா். ஆனால், உறுதி அளித்தபடி பணத்தை தரவில்லை. இதையடுத்து செல்லமுத்துவின் நிறுவனத்தில் முதலீடு செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரசு என்பவா் அளித்தப் புகாரின்பேரில் ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்து உள்ளிட்ட 6 பேரையும் 2010ஆம் ஆண்டு கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் செல்லமுத்து மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 கோடியே 75 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் தொடா்புடைய மற்ற 5 போ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்து அவா்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.