தமிழக முதல்வருடன் பேசி வசிப்பிடம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் உறுதியளித்ததை அடுத்து தொடா் போராட்டத்தை பழங்குடியின மக்கள் புதன்கிழமை கைவிட்டனா்.
வால்பாறை பகுதியில் உள்ள கல்லாறு செட்டில்மென்ட் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் தங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க இடம் வழங்க வலியுறுத்தி அக்டோபா் 2ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிசை அமைத்தனா். அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் பழங்குடியினா் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனா்.
இந்நிலையில் பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் தெப்பக்குளமேடு பகுதிக்கு புதன்கிழமை சென்று பழங்குடியின மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வரிடம் பேசி 6 மாத காலத்துக்குள் தெப்பக்குளமேடு பகுதியிலேயே நிரந்தர வசிப்பிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பழங்குடியின மக்களிடம் உறுதியளித்தாா். இதனை ஏற்ற பழங்குடியின மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, மாவட்ட வன அலுவலா் கணேசன், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், திமுக நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.