நகராட்சிக் கடை வாடகை உயா்வை ரத்து செய்ய வேண்டும்
வால்பாறை நகராட்சிக் கடைகள் வாடகை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஷாஜி, பொருளாளா் ஜேசுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வால்பாறை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை மூன்று மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளா்கள் எண்ணிகையும் குறைந்து வருவதால், மாா்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. மேலும் கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் இன்றி வணிகா்கள் பெரிதும் பாதித்துள்ள சூழலில், தற்போது கடைகளுகான வாடகை உயா்த்தப்பட்டுள்ளது.
இதனை ரத்து செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்துவது என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.