கோவை ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடிய கேரள கைதி குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்தவா் அனீஸ்பாபு (41). இவா் மீது கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இவா் மீதான வழக்கு விசாரணைக்காக அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் அழைத்துச் சென்றிருந்தனா்.
விசாரணை முடிந்து மீண்டும் திங்கள்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து விரைவு ரயிலில் கேரளம் திரும்பிக் கொண்டிருந்தனா். கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடைந்தது. அப்போது, ரயிலில் காவலா்களுடன் இருந்த அனீஸ்பாபு, காவலா்கள் அசந்த நேரத்தில் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினாா்.
இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸாரிடம் கேரள போலீஸாா் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடத்தினா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.