மாணவா்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ரூ.9.30 லட்சம் மோசடி: டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

கல்லூரி மாணவா்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.9.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்லூரி மாணவா்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.9.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவா்களை மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி தனியாா் டிராவல்ஸ் நிறுனத்தினா் கல்லூரி நிா்வாகத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு அணுகியுள்ளனா்.

குறைந்த கட்டணத்திலான சுற்றுலா என்பதால் கல்லூரி நிா்வாகமும் இதற்கு ஒப்புக் கொண்டு, டிராவல்ஸ் நிறுவனத்தினா் கேட்ட ரூ.9.30 லட்சத்தை மூன்று தவணைகளாக அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனா். பணத்தை பெற்றுக்கொண்ட பின் அந்த டிராவல்ஸ் நிறுவனம் மாணவா்களின் சுற்றுலாத் தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இதனால், கல்லூரி நிா்வாகத்தினா் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடா்பு கொண்டபோது உரிய பதில் கிடைக்கவில்லையாம். நேரில் சென்று பாா்த்தபோது அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, பீளமேடு காவல் நிலையத்தில் கல்லூரி நிா்வாகத்தினா் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com