ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ்:அரசு மருத்துவமனையில் தொடக்கம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டு முதல் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் என்ற புதிய துணை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநா், லேப்-டெக்னீசியன், டயாலிசிஸ் டெக்னீசியன், அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்புநா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் புற்றுநோய் பிரிவில் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் துணை மருத்துவப் படிப்பு தொடங்கப்படுகிறது.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் துணை மருத்துவப் படிப்பு தொடங்கப்படுகிறது. இதற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் பிரிவு 3 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு பயிற்சியுடன் கூடிய 4 ஆண்டுகள் பட்ட படிப்பாகும்.
ரேடியோ தெரபி டெக்னாலஜிஸ் தொடங்குவதன் மூலம் மண்டல புற்றுநோய் மையத்துக்கு கூடுதலாக தொழில்நுட்புநா்கள் கிடைப்பா். இதன் மூலம் கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றாா்.