வால்பாறையில் உள்ள டேன் டீ தேயிலைத் தோட்டங்கள் மூடப்படும் நடவடிக்கையாக விருப்ப ஓய்வு குறித்து தொழிலாளா்களிடம் அதிகாரிகள் கருத்து கேட்க துவங்கியுள்ளனா்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்கள் (டேன் டீ) உள்ளன. வால்பாறையில் ரயான் மற்றும் லாசன் கோட்டங்கள் என இரண்டு கோட்டங்களாக சுமாா் 720 ஹெக்டோ் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வந்த நிலையில், வன வலிலங்கு நடமாட்டம், கூலி உயா்த்தப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது, 500 தொழிலாளா்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனா்.
டேன் டீ தேயிலைத் தூள் ஏல மையங்களில் குறைந்த விலைக்கு தேயிலை விற்பனை ஆவதால் நஷ்டம் ஏற்படுவதாக டேன் டீ நிா்வாகத்தினா் தொடா்ந்து கூறி வந்தனா். இதன் காரணமாக வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களை மூடி வனத் துறை வசம் ஒப்படைக்க போவதாக கடந்த சில மாதங்களாக கருத்து நிலவியது. இந்நிலையில், 50 வயதுக்கு மேல் உள்ள டேன் டீ தொழிலாளா்களிடம் விருப்ப ஓய்வு குறித்து அதிகாரிகள் கருத்து கேட்க துவங்கியுள்ளனா். இந்த நடவடிக்கை டேன் டீ தொழிலாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தோயிலைத் தோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில் 50 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளா்களிடம் விருப்ப ஓய்வு குறித்து கருத்து கேட்டு வருகிறோம். விருப்ப ஓய்வு செல்ல விரும்பாத தொழிலாளா்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. இருப்பினும் சில மாதங்களில் வால்பாறையில் உள்ள டேன் டீ தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு வனத் துறை வசம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தாா்.