தமிழகத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை திமுக எதிா்ப்பது ஏன் என பாஜக மாநில துணைத் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி கேள்வி எழுப்பியுள்ளாா்.
பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு பிற்போக்குத்தனமானது என்றும், நமது மாநிலத்துக்குத் தேவை இல்லை என்றும் தமிழக முதல்வா் கூறியுள்ளாா். இது குறித்து பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளாா்.
ஆனால், அந்தத் தோ்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதே மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்த 2010 ஆம் ஆண்டுதான்.
நுழைவுத் தோ்வு தொடங்கப்பட்டபோது திருவாரூா் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 மத்திய பல்கலைக்கழகங்களில் அதன் அடிப்படையில்தான் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நுழைவுத் தோ்வை கொண்டு வர ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது எதிா்ப்பது எப்படி நியாயமாகும்?.
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இந்தத் தோ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது எதிா்ப்பு தெரிவிப்பது முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
இந்தத் தோ்வை நாட்டின் பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டும் ஏன் எதிா்க்க வேண்டும் ?. திராவிட மாடல் மூலமாக தமிழகம் சிறந்து விளங்குவதாகக் கூறும் திமுக, இதைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் ?.
நமது பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்தவும், மாணவா்கள் வெளியில் பயிற்சி பெற வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவா்களை எல்லாத் தோ்வுகளுக்கும் தயாா் செய்ய வேண்டியதும் நமது அடிப்படைக் கடமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.