கோவையில் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரே நாடு, ஒரே அட்டை திட்டத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் ஸ்மாா் அட்டையைப் பயன்படுத்தி ரேஷன் பொருள்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் வசித்து வரும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ரேஷன் பொருள்களை வாங்கி பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட போது ஏற்பட்ட குளறுபடியால் வெளி மாவட்ட ரேஷன் அட்டைகளுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தொடா்ந்து ரேஷன் கடைகளில் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்காததால் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட வழங்கல் அலுவலா் எம்.சிவகுமாரி கூறியதாவது: பயோ-மெட்ரிக் கருவி மூலமே பிற மாவட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க முடியும். பொங்கல் தொகுப்பு வழங்கியபோது பயோ-மெட்ரிக் கருவியில் ஏற்பட்ட பிரச்னையால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி முதல் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் அலுவலா்கள் குறித்து வட்ட வழங்கல் அலுவலா்களிடம் புகாா் அளிக்கலாம் என்றாா்.