பொள்ளாச்சி அருகே பழங்குடியின சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களை கைது செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகம் கூமாட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை வனக் கிராமத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமியை, சில நபா்கள் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பழங்குடி மக்களிடத்தில் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பழங்குடி சிறுமி மீதான இந்த வன்கொடுமை ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்த வன்கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.