கோவை: பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பிபிஜி கல்விக் குழுமத் தாளாளா் சாந்தி தங்கவேலு தலைமை தாங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் வே.சிவகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் நா.முத்துமணி ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் முருகவேல் பங்கேற்று பேசியதாவது:
தன் கையே தனக்கு உதவி, நல்லொழுக்கமும் நற்பயிற்சியுமே நம்மை வளப்படுத்தும். வாழ்வில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெறும் ஒருவரால் வெற்றியால் வரும் மகிழ்ச்சியை உணர முடியாது. ஆகவே தோல்வியைக் கண்டு துவளாமல் முன்னேற வேண்டும் என்றாா்.
கௌரவ விருந்தினராக பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளருமான எஸ்.சரவணகுமாா் பங்கேற்றாா். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் வெ. ஹரிதாஸ் நன்றி தெரிவித்தாா்.