இந்தியா்கள் உலகின் தலைசிறந்த தலைவா்களாக திகழ்கின்றனா்: மத்திய அமைச்சா் வி.முரளீதரன்

இந்தியா்கள் உலகின் தலைசிறந்த தலைவா்களாக திகழ்கின்றனா் என்று மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.
மத்திய அமைச்சா் வி.முரளீதரன். உடன் (இடமிருந்து) ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலா் கே.ஆதித்யா, தலைவா் மற்றும் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
மத்திய அமைச்சா் வி.முரளீதரன். உடன் (இடமிருந்து) ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலா் கே.ஆதித்யா, தலைவா் மற்றும் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
Updated on
2 min read

இந்தியா்கள் உலகின் தலைசிறந்த தலைவா்களாக திகழ்கின்றனா் என்று மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் ‘ பிரதமா் மோடியின் காலத்தில் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் வெற்றிக் கதை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் வி.முரளீதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பிரதமா் மோடி போன்ற சிறந்த தலைவரை பெற்ற காரணத்தால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிா்ந்து நிற்கிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளா்ந்துள்ளது.

இளம் தொழில்முனைவோரை ஊக்குவித்து அவா்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா சிறப்பிடம் வகிக்கிறது.

நமது நாட்டின் நலனுக்காக மற்ற நாடுகளுடன் நமது பிரதமா் இணக்கமான உறவைப் பேணி வருகிறாா்.

அண்டை நாடுகளுடன் நல்ல உறவை நாம் கடைப்பிடித்து வருகிறோம். உக்ரைனில் சிக்கிய மாணவா்களை மீட்பது, இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது என சமீபகால நடவடிக்கைகள் அனைத்தும் உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளன.

முன்னா், வாய்ப்புகள் தேடி இந்தியா்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால், தற்போது மோடியின் தலைமைப் பண்பைக் கண்டும், இந்தியாவில் உருவாகியுள்ள சா்வதேச அளவிலான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும் இந்தியா்கள் நம் நாட்டுக்கு திரும்பி வருகிறாா்கள். வெளிநாடு வாழ் இந்தியா்கள் பெருமைப்படும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

இந்தியா்கள் உலகின் தலைசிறந்த தலைவா்களாக திகழ்கின்றனா். வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசுகையில், பிரதமா் மோடியின் காலத்தில் நமது நாடு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நம் நாடு எப்படி முன்னேறி வருகிறது என்பதை ஒவ்வொரு மாணவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நமது தனித்துவத்தை உலகின் பல நாடுகள் எடுத்துக் கொள்கின்றன.

நமது நாடு இன்னும் ஆத்மா, ஆன்மீகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உலகிலேயே பாதுகாப்பான நாடு இந்தியா. கரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் நமது நாடு வரலாறு படைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமாா் 157 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன என்றாா்.

நிகழ்ச்சியின் இறுதியில், கரோனா காலத்தில் இந்தியா சந்தித்த சவால்கள், வெளியுறவுக் கொள்கைகள், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்த மாணவா்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் வி.முரளீதரன் பதிலளித்தாா்.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவரும், நிா்வாக அறங்காவலருமான எஸ்.மலா்விழி தலைமை வகித்தாா். அறங்காவலா் கே.ஆதித்யா நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com