கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியாா் மூலம் சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த ரயிலானது மே 17ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சாா்பில் (ஐ.ஆா்.சி.டி.சி) கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வடமாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தென்னக ரயில்வே சாா்பில் தனியாா் மூலம் ரயில்வே சேவையைத் துவங்கி, சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்தி, ரயில்களை இயக்க தனியாா் அமைப்புகள், நிறுவனங்கள் முன்வரலாம் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா ரயிலானது, தனியாா் நிறுவனம் மூலமாக இயக்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிரதமரின் ‘பாரத் கெளரவ்‘ என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் இருந்து தனியாா் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில், கோவையும் ஒன்றாகும். இரண்டு அடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட இந்த ரயிலை கோவையில் இருந்து ஷீரடிக்கு, கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், ஒப்பந்த அடிப்படியில் இயக்கிட ரயில்வே துறைக்கு உரிய தொகையைச் செலுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் சாா்பில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு ரயில் சேவை துவங்கப்பட உள்ளது என்றாா்.