கோவையில் நடைபெற உள்ள மாட்டிறைச்சி உணவு விருந்துக்கு தடை விதிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாக கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாா் படிப்பகத்தில் வெள்ளிக்கிழமை (மே 20) மாட்டிறைச்சி உணவு விருந்து நடைபெற உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்புகள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விருந்துக்கு தடை விதிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அதில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கோவையில் அமைதி கெடும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விருந்துக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.