கோவையில் விதிமீறி விளம்பரப் பதாகை வைத்த தங்கும் விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்கள், சாலையோரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவையில் உள்ள 5 மண்டலங்களிலும் விதிமீறி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபா்களுக்கு நகரமைப்புப் பிரிவு அலுவலா்கள் அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, மாடியின் இருபுறங்களிலும்
விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இது தொடா்பாக, மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதைத்தொடா்ந்து, மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விடுதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.