கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் தாமரைக் கண்ணன்வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கோவையில் இரு நாள்களாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்க, அதிவிரைவுப் படை போலீஸாா், கோவையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனா்.
இந்நிலையில், கோவை வந்த தமிழக காவல் துறையின் கூடுதல் இயக்குநா் தாமரைக் கண்ணன், கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், துணைக் காவல் ஆணையா்கள், அதிவிரைவுப் படை உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படாத விதமாக வாகனச் சோதனையை தீவிரப்படுத்துமாறும், பாதுகாப்புப் பணியில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலைமுதல் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இருதரப்பினரிடையே மோதல்:
கோவை, ரத்தினபுரி கண்ணப்பா நகரில் வெள்ளிக்கிழமை மாலை இரு சமூகத்தைச் சோ்ந்த இருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், கோவையில் நிலவி வரும் அசாதரண சூழலில் அமைதி காக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, இச்சம்பவம் தொடா்பாக இருதரப்பில் இருந்தும் புகாா் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.