தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறையில் காற்றின் தன்மை குறித்து அளவிடும் கருவிக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பயிா்களில் ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதல்களுக்கு ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது. ஆளில்லா விமானத்தில் உள்ள இறக்கையின் மூலம் ஏற்படும் காற்றின் விசையை அளவீடு செய்வதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் பிரத்யேக கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானத்தை பல்வேறு உயரங்கள், எடைகளில் இயக்கி அதன் மூலம் உருவாகும் காற்றின் விசையின் தன்மைகளை அறிந்துகொள்ள இக்கருவிப் பயன்படுகிறது.
இக்கருவியின் மேற்பகுதியில் தூரத்தை அளவீடு செய்யக்கூடிய லேசா் ஒளிகற்றையில் இயங்கக்கூடிய கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளில்லா விமானம் இயக்கப்படும் உயரத்தை அளக்க முடியும். இறக்கைகளில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றின் விசையை அளவீடு செய்ய 0 மில்லி மீட்டா், 500 மில்லி மீட்டா், 1,000 மில்லி மீட்டா், 1,500 மில்லி மீட்டா், 2,000 மில்லி மீட்டா் இடைவெளிகளில் காற்றுவேக அளவி பொருத்த சதுரவடிவ குழாய் சட்டகத்தின் நடுவே இணைக்கப்பட்டுள்ளது.
இக்கருவிக்கு காப்புரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டுபிடித்த காற்றின் தன்மை அளவிடும் கருவிக்கு காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.