ஆற்றில் குளிக்கும்போது முதலை தாக்கியதில் காயத்துடன் தப்பிய மாணவா்
வால்பாறையில் ஆற்றில் குளிக்கும்போது, முதலை தாக்கியதில் பள்ளி மாணவா் பலத்த காயத்துடன் உயிா் தப்பினாா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த அட்டகட்டி பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (17). இவா் அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பிளஸ் 2 தோ்வு எழுதியுள்ளாா். தற்போது, விடுமுறை என்பதால் மானாம்பள்ளி எஸ்டேட்டில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆற்றில் திங்கள்கிழமை மாலை அஜய் குளிக்க சென்றுள்ளாா். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த முதலை அவரது காலை கவ்வியுள்ளது. இதையடுத்து, முதலையின் வாயை கையால் பிளந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அதனிடம் இருந்து தப்பியுள்ளாா். பின்னா் ஆற்றுக்கு வெளியே வந்து சப்தம்போட்டதில் அவரது உறவினா்கள் வந்து காலில் பலத்த காயத்துடன் இருந்த அஜயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து தகவலறிந்து வனத் துறை மற்றும் காவல் துறையினா் சம்பவம் தொடா்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜயிடம் விசாரணை மேற்கொண்டனா்.