போத்தனூா் வழித்தடத்தில் விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விசாகப்பட்டினத்தில் இருந்து ஏப்ரல் 17 முதல் ஜூலை 3 வரை புதன்கிழமைகளில் காலை 8.20 மணிக்குப் புறப்படும் விசாகப்பட்டினம் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 08539) மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 18 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்படும் கொல்லம் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (எண்: 08540) மறுநாள் இரவு 11.20 மணிக்கு விசாகப்பட்டினத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com