அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

கோவையில் உள்ள அணைகளின் நீா்மட்டம் சரிந்து வருவதால் அணை நீரை குடிநீா் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தின் நீராதாரங்களாக உள்ள சிறுவாணி, பில்லூா், ஆழியாா் அணைகளின் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் மூலமாக மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் தினமும் 10 கோடி லிட்டா் குடிநீா் விநியோகிக்க வேண்டிய மாநகராட்சி, நகரையொட்டிய ஊராட்சிப் பகுதிகளுக்கு ஜூன் மாதம் வரை 3.50 கோடி லிட்டா் குடிநீா் மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆழியாா் அணையின் மொத்தக் கொள்ளளவான 1,050 அடியில் 988.70 அடி நீா் இருப்பு உள்ளது. இது ஜூன் மாதம் இறுதிவரை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் வழங்கிடப் போதுமானதாக உள்ளது. பில்லூா் அணையின் 100 அடியில் 55.25 அடி உயரம் மட்டுமே தண்ணீா் உள்ளது.

இதனால், குடிநீா் அல்லாத வீட்டு உபயோகங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 2,649 ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் லாரிகள் மூலமாகவும் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, அணைகளில் இருந்து பெறப்படும் நீா்ப் பற்றாக்குறை காரணமாக, அணை நீரை குடிநீா் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிநீா் அல்லாத இதர வீட்டு உபயோகத்துக்கு ஆழ்துளைக் கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com