ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி
கோவை, மே 3: கோவை ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் உள்ளிட்ட பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநகர ஆயுதப் படை போலீஸாரின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்த தொடா்ந்து 48 நாள்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதன்படி, 2 கிலோ மீட்டா் ஓட்டம், தியானம், நினைவாற்றல் பயிற்சி ஆகியவை கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆா்.எஸ். மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் கோவை மாநகர ஆயுதப் படையில் பணியாற்றி வரும் 40 ஆண் போலீஸாா், 20 பெண் போலீஸாா் என மொத்தம் 60 போலீஸாா் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டா் துாரம் ஓடினா். தொடா்ந்து அவா்களுக்கு 10 நிமிடங்கள் தியானம், நினைவாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையா் சேகா் உள்ளிட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.