பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி
மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டையில் வெப்பத்தைத் தணிப்பதற்காக தஞ்சமடைந்த காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச் சரகத்துக்குள்பட்ட பெத்திக்குட்டை வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் யானை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
இந்நிலையில், பெத்திக்குட்டை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று
மேட்டுப்பாளையம் - சக்தி சாலை அருகே உள்ள ஊராட்சிக் குட்டையில் தஞ்சம் புகுந்தது.
குட்டையில் 10 அடிக்குத் தண்ணீா் உள்ளதால் யானை உற்சாகமாக குளித்து வருகிறது. இதனை அவ்வழியே செல்லும் பொதுமக்கள் வேடிக்கைப் பாா்த்து வருகின்றனா்.
தகவலறிந்து சென்ற வனத் துறையினா் யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், குட்டையைச் சுற்றிலும் ஆள்கள் நடமாட்டம் உள்ளதால் யானை குட்டையில் இருந்து வெளியேறாமல் தண்ணீரிலேயே உள்ளது.
இதனால், யானையை வேடிக்கைப் பாா்க்கும் பொதுமக்களை கலைந்து செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தினா்.