கோயம்புத்தூர்
டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு
மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் மது போதையில் மயங்கிவிழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையம் ரங்கராஜ் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தராஜ்(44). இவருக்கு அம்பிகா (38) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.
கூலித் தொழிலாளியான இவா் தினமும் மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விவேகானந்தராஜ் செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிவிழுந்துள்ளாா்.
இது குறித்து தகவலறிந்த அவரின் உறவினா்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.