ஆடிப் பெருக்கையொட்டி, பவானிசாகர் அணையில் சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
ஆடிப் பெருக்கு தினத்தன்று பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை முதலே திரளானோர் பவானிசாகர் அணைக்கு வந்தனர்.
அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ள நிலையில், அணையைப் பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதியது. அணைப் பூங்காவிலும் இளைஞர்கள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோரின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அணைப் பூங்காவில் உள்ள குளத்தில் சிறுவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடிவேரி அணையில்...
ஆடிப் பண்டிகையையொட்டி, கொடிவேரி அணைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தற்போது தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது. ஆடிப் பண்டிகையையொட்டி, கொடிவேரி அணைக்கு கோபி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து, அணையில் குளித்து மகிழ்ந்தனர். கோபி, காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.