சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால வாகன ஓட்டிகள் இரவில் அவ்வழியாகச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த தலமலை, கெத்தேசால், கேர்மாளம், திம்பம், பண்ணாரி, தெங்குமரஹாடா ஆகிய வனப் பகுதிகளில் சிறுத்தை, புலிகள் அதிக அளகவில் நடமாடுகின்றன. தலமலை வனப் பகுதியில் இருந்து திம்பம் மலைப் பாதையில் உள்ள 3,10,23,25,26-ஆவது வளைகள் வழியாக பண்ணாரி வனப் பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்வது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
ஏற்கெனவே, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தால் பாதுகாப்பு காரணமாக திம்பம் மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை பயணிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாடியது அங்கு வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி இருப்பதை அடுத்து, மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை வாகனங்கள் செல்வதற்கு மேலும் 2 மாதத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.