குடிநீர்க் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
ஈரோடு மாநகராட்சி 60-ஆவது வார்டு பகுதியில் உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைக்கக் கோரி காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மாநகராட்சியின் 60-ஆவது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம் பாபு தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனு விவரம்:
காந்திபுரம் பாபு தோட்டம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு மாநகராட்சி மூலமாக 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரையும் எடுத்து பயன்படுத்தி வந்தோம். ஆனால், கடந்த 4 மாதங்களாக மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. கிட்டத்தட்ட 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஆழ்துளைக் கிணற்று நீரும், குடிநீரும் சாலையோரத்தில் உள்ள மக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டபோது, இப்பகுதிக்கு வரும் 2 இன்ச் குடிநீர்க் குழாய் உடைந்துவிட்டதாக கூறுகின்றனர். இதனால், தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகிறோம். எனவே, உடனடியாக குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, பொதுக் கழிப்பிடத்துக்கும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.