குளம், குட்டைகளில் வண்டல், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோபி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, கோபி வட்டத்துக்கு உள்பட்ட கடுக்காம்பாளையம், பழையூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு விவரம்:
கோபி தாலுகா, கடுக்காம்பாளையம் கிராமம், கருப்பக்காட்டுர் அருகே உள்ள சித்தி விநாயகர் நகர் குட்டையில் மண், கிரவல் மண் அள்ள அனுமதி கொடுக்குமாறு கோபி வருவாய்க் கோட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு வண்டல், கிராவல் மண் அள்ள அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இக்குட்டையைச் சுற்றி உடையாம்பாளையம், நாதிபாளையம், சித்தி விநாயகர் நகர் ஆகிய ஊர்களில் உள்ள பொதுமக்கள் குடிக்ககூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்டிருந்த தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சக்கூட வழியில்லாமல் விலைக்கு வாங்கி வருகின்றனர்.
எனவே, இந்தக் குட்டையைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.