பெருந்துறை அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.
பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் பேரூராட்சி, எளையாம்பாளையம், மாங்காத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சீதப்பகவுண்டர்( 70). இவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில், தோட்டத்தில் இருந்த மின் கம்பத்தில் தென்னைமட்டை செவ்வாய்க்கிழமை மாலை விழுந்தது. அப்போது தீ பிடித்து, காய்ந்த சருகுகள் மீது விழுந்தது. இதில் கரும்பு காட்டில் மளமளவென தீ பரவியது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
ஆனாலும், மூன்று ஏக்கர் பரப்பிலான கரும்பு எரிந்து சேதமடைந்தாக கூறப்படுகிறது.