பாபர் மசூதி விவகாரத்தில் சட்டப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். பருவமழை பொய்த்துப் போனதால் குடிநீருக்கும், மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாபர் மசூதி விவகாரத்தில் மதரீதியான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது தவறான முன் உதாரணமாகும். இவ்விவகாரத்தில் சட்டப்படியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதில், மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் அப்துல்நாசர், மாநில பொதுச் செயலாளர் முகம்மது யூசுப், மாநில பொருளாளர் கலீல்ரசூல், மாநில செயலாளர்கள், மாநில தணிக்கைக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.