பவானியை அடுத்த குருவரெட்டியூரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. பரவலாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் இக்கடைக்கு வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததோடு, மது போதையில் அத்துமீறல்களும் அதிகரித்து வந்தது. இதுகுறித்து, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் தெரிவித்து, மதுக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக் கடையை முற்றுகையிட்டதோடு, உடனடியாக மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூர் வட்டாட்சியர் செல்லையா, டாஸ்மாக் நிறுவன மேலாளர் லியாகத் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து, மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.