பவானியை அடுத்த அம்மாபேட்டையில் இயங்கி வந்த ஒரே டாஸ்மாக் மதுக் கடையும் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை மூடப்பட்டது.
பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வந்த மதுக் கடைகள் பொதுமக்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து மூடப்பட்டன. இந்நிலையில், அம்மாபேட்டையில் மட்டும் ஒரே ஒரு மதுக்கடை இயங்கி வந்தது. இக்கடைக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் மது அருந்த வந்ததால் அப்பகுதியே நிறைந்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், இக்கடையையும் மூடக் கோரி அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அந்தியூர் வட்டாட்சியர் செல்லையா, பவானி காவல் ஆய்வாளர் இளங்கோ, அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
மதுக் கடையை மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இக்கடையையும் மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளில் அடுத்தடுத்து 11 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.