கொடுமுடி அருகே சிவகிரி, விளக்கேத்தி கிராமத்துக்கு உள்பட்ட புது அண்ணாமலைப்பாளையத்தில் வடமதுரை ஸ்ரீ மதுரை வீரன் கோயிலில் ஆட்டுக்கிடா வெட்டி பூசாரி ரத்தம் குடிக்கும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் பொங்கல் திருவிழா மே 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வியாழக்கிழமை சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் பூசாரி, 8 அடி தூரத்துக்கு ஒரு கிடாய் வீதம் 25-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்களை வெட்டி, ரத்தத்தை குடித்தார். தொடர்ந்து, குழந்தையில்லாத தம்பதிகளுக்கு ரத்தத்தைப் பிரசாதமாக வழங்கினார். இரவு 10 மணிக்கு மதுரை வீரன் ராஜ அலங்கார பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு படைக்கலம் அழைத்தல், பொங்கல் திருவிழாவும், மஞ்சள் நீராட்டு விழா சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை வீரன் சுவாமி பொங்கல் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.