பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வீரபாண்டியன் (22). குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இவர், நண்பர்களுடன் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்குக் கீழே பவானி லட்சுமி நகர் அருகே குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதியில் மூழ்கினார்.
அப்பகுதியில் ஆகாயத் தாமரைகள் பரவலாக வளர்ந்திருந்ததால் அதற்குள் சிக்கியிருக்கலாம் என தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மீனவர்கள் ஆகாயத் தாமரைச் செடிகளை வெட்டி அகற்றியும், தண்ணீரில் மூழ்கியும் தேடிப் பார்த்தனர். சுமார் 2 கி.மீ. பரப்பளவுக்கு ஆகாயத் தாமரைகள் வளர்ந்துள்ளதால் வீரபாண்டியன் கிடைக்கவில்லை.
மேலும், தண்ணீரில் மூழ்கிய இளைஞர் வீரபாண்டியன், உயிரோடு பிழைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்ட நிலையில், அவரது சடலம் ஒதுங்கியுள்ளதா எனவும் பரவலாக தேடிப் பார்க்கப்பட்டது. ஆனால், மீனவர்கள், உறவினர்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.