ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸாரின் குழந்தைகளைப் பாதுகாக்க பகல் நேர குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் பணியின் காரணமாகவும், கணவர் -மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதாலும் தங்களது குழந்தைகளை பகல் நேரத்தில் பாதுகாப்புடன் பாராமரித்து உணவுகள் வழங்க மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அதற்கு குழந்தைகள் காப்பகம் அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் நடவடிக்கையின் பேரில், ஈரோடு, ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப் படை பிரிவு வளாகத்தில் போலீஸாரின் குழந்தைகளைப் பாதுகாக்க பகல் நேர காப்பகம் தொடங்கப்பட்டது.
இந்தக் காப்பகத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தொடக்கி வைத்துப் பேசுகையில், இந்தக் காவலர் குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு பெண் காவலர்கள் பணியில் இருப்பார்கள். போலீஸாரின் குழந்தைகளை காலை 8 முதல் மாலை 6 மணி வரை விட்டுவிட்டு பணிக்குச் செல்லலாம். இங்கு விடப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டு, உணவு உள்ளிட்டவை அளித்து பராமரிக்கப்படும் என்றார்.