எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்ட புதிய சீருடைகள் தலா 4 வீதம் அரசே வழங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பயனாளிகளுக்குக் கடன் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கறவை மாடு கடன், பயிர்க் கடன், மாற்றுத் திறானாளிகளுக்கான கடன் என 24 பேருக்கு மொத்தம் ரூ.15 லட்சம் கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குள்ளம்பாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டப்படும். வரும் ஆண்டு 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் தலா நான்கு வீதம் அரசே வழங்கவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆயிரம் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களை ஓரிரு மாதங்களுக்குள் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நீட் தேர்வுப் பயிற்சியில் கடந்த ஆண்டு 3,019 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதற்கட்டமாக
நீட் தேர்வுக்கு 6 மாதங்களுக்கு முழுப் பயிற்சி அளிக்க அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 1000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் நிலையை அரசு உருவாக்கும் என்றார்.
திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.