சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக உயரமுள்ள சரக்கு லாரிகளை அளவீடு செய்ய குறுக்கு சட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இது தமிழக கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளதால் 24 மணி நேரமும் கனரக மற்றும் பயணிகள் வாகனங்கள் இதில் பயணிக்கின்றன. மிகவும் குறுகலாகவும் மேடாகவும் உள்ள இந்தப் பாதையில் அடிக்கடி லாரிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றன.
சாலையில் பழுதாகி நிற்கும் அதிக உயரமுள்ள லாரிகளால் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அதிக உயரமுள்ள சரக்கு வாகனங்களை அளவீடு செய்து கட்டுப்படுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் இரும்பு சட்டங்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பாதையில் 5 மீட்டர் உயரத்துக்கு அதிகமான சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
அதேபோல பண்ணாரி, ஆசனூரில் எடை மேடை அமைக்கப்படும் பணி துவங்கயுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பாரம் கொண்ட லாரிகள் எடை மேடைகளில் எடை சரிபார்க்கப்பட்டு அதன்பிறகு அனுமதிக்கப்படும்.
அண்மையில் திம்பம் மலைப்பாதையை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.கதிரவன், திம்பம் மலைப் பாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சரிசெய்யவும், ஆபத்து நிறைந்த குறுகலாக உள்ள இடத்தை விரிவுபடுத்தவும் உத்தரவிட்டார்.
திம்பம் மலைப் பாதையில் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வனத் துறை, நெடுஞ்சாலை துறை, காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.