கோவை மாவட்டம், ஆனைகட்டி, திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் ஆகியன சார்பில் பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதுதல் பெரு விழா, ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்டு வருகிறது. 12 மாதங்களும் நடைபெறும் இந்த நிகழ்வின் பத்தாம் மாத முற்றோதுதல் விழா ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண அரங்கில் காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
சிவ நெறிகள் செழிக்கச் செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவாரூர் அரிகரதேசிக ஓதுவார் மூர்த்தி சுவாமிகள் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓதுவார்கள் பங்கேற்று நாயன்மார்களில் முதன்மையானவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களைப்பாடி அதற்கு விளக்கம் அளித்தனர். இசையுடன் கூடிய இந்த முற்றோதுதல் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், சிவனடியார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.