கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை, செட்டிபாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த மாணவர் லூர்து ஆண்ட்ரூஸ் (19). இவர், கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். இவரும், இவரது அண்ணன், நண்பர்களுடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் சுற்றுலாவுக்காக திங்கள்கிழமை வந்தனர்.
குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லூர்து ஆண்ட்ரூஸ் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக, நண்பர்கள் தண்ணீரில் இருந்து அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து, பங்களாபுதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.