தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும் திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து நடத்திய 30வது மாநில அளவிலான இளையோர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, திருவேற்காட்டில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபடி கழக பெண்கள் அணி கலந்து கொண்டு, லீக் சுற்றில் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்ட அணிகளை வீழ்த்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சேலம் அணியையும், கால் இறுதியில் திருநெல்வேலி அணியையும் வீழ்த்தியது. அரை இறுதியில் தருமபுரி மாவட்ட அணியுடன் விளையாடினர்.
இதில், ஈரோடு மாவட்ட அணி மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றது.
ஈரோடு மாவட்ட பெண்கள் கபடி அணியில், சீனாபுரம், தி ரிச்மாண்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோபிகாஸ்ரீ, பரமேஸ்வரி, பிரியவதனா, லோகிதா ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர்.
மாநில கபடி போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்ட அணியில் பங்கேற்ற, ரிச்மாண்ட் பள்ளி மாணவிகள், ஈரோடு அணியின் பயிற்சியாளர் ச.கவின்சங்கர் ஆகியோரை பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது, பள்ளித் தாளாளர் கே.கே.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.