ஈரோடுபாலக்காடு பயணிகள் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை புதிய பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாட்ஷா, சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரையில் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்தப் பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு வேலைக்கு செல்லும் பயணிகளுக்கும், 26 கல்லூரி, 6 பல்கலைக்கழகங்கள் செல்லும் மாணவர்களுக்கும், மருத்துவமனை செல்லும் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தன.
மேலும், ரயில்வே நிர்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைத்து வந்தது. போராட்ட அறிவிப்புக்கு பிறகு பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து கோவை வரை இயக்கப்படுகின்றன. இந்த ரயிலும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கும்போது பயணிகள் கூட்டம் இல்லை. ஆகவே, வருவாய் இழப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது. எனவே, இந்த ரயிலை சேலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கை மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் ரயில் பயணிகளையும், பொதுமக்களையும் திரட்டி ஈரோடு ரயில் நிலையம் எதிரில் மே மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.