பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 93 அடியை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை குறித்த நேரத்தில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் 63 அடியாகவும், நீர் இருப்பு 8 டிஎம்சி யாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு, மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து புதன்கிழமை நிலவரப்படி 93 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 23.5 டிஎம்சியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,194 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர், பாசனத்துக்கு பவானி ஆற்றில் 1,300 கன அடி வீதமும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் அணையிலிருந்து மேல்மதகுகள்
வழியாக 37 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 93 அடியை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கும் நன்செய் பாசனத்துக்கு 3 மாவட்டங்களில் உள்ள
1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.