ஈரோட்டில் பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, கருங்கல்பாளையம் சாய்பாபா கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாபா காட்சி அளித்தார்.மேலும், ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஈரோடு குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தி விநோத சுவாமி மஹராஜ் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் பங்கேற்ற ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகம் நடைபெற்றது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு 9.15 மணி அளவில் கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறுகிறது.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சனமும், பூஜையும், தீப ஆராதனையும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு 7 மணிக்கு கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோபியில்...
கோபியில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு குழந்தைகளின் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, நந்தகோகுலம் கோசாலையில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ கிருஷ்ண கீர்த்தனம் தொடர்ந்து குழலிசை ஆகியவை நடைபெற்றன. மாலையில் சிறப்பு கோபூஜை, சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை தொடர்ந்து, 108 குழந்தைகள் ராதை கிருஷ்ணர் வேடமணிந்து ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை, கூனம்பட்டி ஸ்ரீ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் துவக்கி வைத்தார். கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, யோகா பயிற்றுநர் சம்பத்குமார், டாக்டர் வெங்கடபாஸ்கரன், தொழிலதிபர்கள், குழந்தைகளும், பெற்றோரும் கலந்துகொண்டனர்.