காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பவானியில் அனைத்து கட்சியினர், அனைத்து வணிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பவானி புதிய பேருந்து நிலையம் அருகே புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையம், பூக்கடை வீதி அருகே முடிவடைந்தது. தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார்.
அதிமுக நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ், திமுக மாநில மாணவரணி துணைச் செயலர் பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.கே.விஸ்வநாதன், எஸ்.எஸ்.சித்தையன், பெரியசாமி, மோகன், திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.