ஈரோடு அருகே உள்ள நசியனூர் பேரூராட்சி நிர்வாகத்தில் அரசு அறிவிப்புக்கு மாறாக வீடு, வணிகக் கட்டடங்களுக்கான வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இதில், அரசாணைப்படி குடியிருப்புப் பகுதிக்கு 50 சதவீதமும், வணிகக் கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் வரியை உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நசியனூர் பேரூராட்சிப் பகுதியில் 50 முதல் 1,000 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குடிநீர் வரி வீடுகளுக்கு ரூ. 300-லிருந்து ரூ. 3 ஆயிரத்துக்கு மேலும், வணிக கட்டடங்களுக்கு பல மடங்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர குப்பைக்கு புதிதாக வரி விதித்துள்ளனர்.
வரி உயர்வை கைவிட்டு சாதாரண மக்கள் செலுத்தும் வகையில் மாற்றி அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.