சென்னையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஈரோட்டில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலர் கிஷோர்குமார் பங்கேற்றார்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்: சென்னை மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் குடிநீர் டேங்கர்கள் இணைத்து தண்ணீர் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகரில் திட்டப் பணிகளை வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு மாற்று வழித் தடத்தை ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி ஜூலையில் ஈரோடு மாநகரில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.