அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
மொடக்குறிச்சி தொகுதி அனைத்து கட்சியினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) சேகர் தலைமை வகித்தார். துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மொடக்குறிச்சி வட்டாட்சியர் அúஷ்ரபுன்னிஸா நடத்தை விதிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் கட்சியினர் வரைந்த பழைய சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் கட் அவுட்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்துத் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் அனைத்து கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கொமதேக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி, அறச்சலூர், கொடுமுடி ஆகிய காவல்நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.